Have a nice day readers...!!!

Wednesday, January 7, 2015

வாசல் கோலம்


காலை , மாலை ரெண்டு வேளையும் வீட்டு வாசலில்  கோலம் போடுவதை தமிழ் நாட்டில, பல வீடுகளில் இன்னைக்கும் ஒரு கடமையா செய்து வருகிறார்கள் 

எனக்கு  தெரிந்து வாசல் கோலம் இரு வகை . புள்ளி வைத்தது , புள்ளி வைக்காதது. புள்ளி  வைத்த கோலம், மேலும் இரு பிரிவு கொண்டது. சிக்கு கோலம் மற்றும்  பூ அல்லது படக் கோலம் 

புள்ளி வைக்காத கோலம் 

புள்ளி வைத்த கோலம் (சிக்கு கோலம் )

புள்ளி வைத்த கோலம் (படக்  கோலம் )


புள்ளி வைத்த கோலத்திலும்  நேர் புள்ளி ,ஊடு புள்ளி என்று இரு வகை கோலம் உண்டு.

 கோலத்துக்கும் எனக்கும் ஒரு காலத்தில் (பள்ளி  பருவத்தில் ) சம்பந்தம் இருந்தது. கோல  புத்தகம் , கோல நோட்டு கையுமா  இருந்திருக்கேன். கொஞ்ச காலத்திற்கு தினமும் காலை மாலை என இருவேளையும் வாசலில் கோலம் போடுவது என் கடமைகளில் ஒன்றாக இருந்தது. 

பாக்யராஜ் சார் படத்தில தாங்க , வயசு பொண்ணுங்க குளித்து , பளிச்சுன்னு உடை மற்றும் தலை கொண்டை (மறக்காம கொண்டைய சுத்தி துண்டு ) போட்டு காலை ஐந்து மணிக்கே கோலம் போடுவாங்க. அந்த கோலத்தை பார்க்க பார்க்க ஹீரோ(?) வருவாரு, அதுவும் சைகிளில்.அதை பத்தி பேச ஆரம்பிச்சா தலைப்பு மாறி போயிடும். கோலத்துக்கு வருவோம்.

என்னுடைய காலை கோலம்  என்றால் , ஐந்து மணி எல்லாம் கிடையாது. பல நேரம் அது ஏழு மணியாக தான் இருக்கும். பல பேருக்கு அது பள்ளி கூடம் அல்லது வேலைக்கு செல்லும் நேரம். அவர்கள் நான் கோலம் போடுவதை பார்க்கும் போது, கோவமாக வரும்.அனாலும் என்னால் சீக்கிரம் எழுந்து , குளித்து ரெடியாகி கோலம் போட முடிந்தது இல்லை. 


கோலம் போடு என்று என் அம்மா சொன்னால் , அது மூன்று உள் வேலை  கொண்டது. வாசல் பெருக்க (விளக்கமாறு  / துடைப்பம் கொண்டு  கூட்டுதல் ), நீர் தெளித்து கழுவுதல் , கோலம் போடுதல்.

 லீவில்  ஊருக்கு  போனா  பாட்டி , "முத்தம் தெளிச்சியா?" ன்னு கேட்பாங். ஊருக்கு ஊரு இந்த பேச்சு மாறும். இன்னமும் நாகர் கோவில் பக்கம் எல்லாம் இப்படித்தான் கேப்பாங்க. உண்மையில் முற்றம் (வாசல்) என்னும்  வார்த்தை  தான் கால போக்கில் மாறி முத்தம் ஆயிற்று. 


சென்னை வந்ததும் , ஒரு அம்மா வந்து கேட்டது. "முறை வாசல் செய்ய ஆள் வேண்டுமா ? " எனக்கு புரிய வில்லை. அப்படின்னா என்ன என்று கேட்டேன். காலை மாலை இரு வேலையும் கோலம் போடுவதை தான் முறை வாசல் என்று சொல்கிறார்கள் என்று விளக்கம் அறிந்தேன். "முறை  வாசல்"  என்பது "முத்தம் தெளித்தல்" என்பதை விட தேவலை என்று தோன்றியது. 

நாகர்கோவிலின் சுத்த தமிழ் கால போக்கில் கலப்படம் ஆனதை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்.

அந்த காலத்தில் பச்சை அரிசி மாவில் கோலம் போட்டதாக சொல்கிறார்கள். நான் கோலம் போட்டது சுண்ணாம்பு கல்லில் இருந்து பொடி செய்யப்பட்ட மாவில் தான். மண்ணில் இருக்கும் எறும்பு போன்ற ஜீவன்களுக்காக பச்சை அரிசி மாவு  கலந்து மண் தரையில் கோலம் போடுபவர்களும் உண்டு.ஆனால் இப்பொழுது பல வீடுகளில் வாசல்  சிமெண்டு தரை தான். மொசைக் தரையாக இருப்பின் பலர் கோலம் பெயிண்ட் செய்து விடுகிறார்கள் அல்லது கோல  ஸ்டிக்கர் வாங்கி ஒட்டி விடுகிறார்கள்.


இன்றும் , நாங்கள் குடி இருக்கும் வீடும், தெருவில் இருந்து  உள்ளே இருப்பதால் நான் கோலம் போடுவது இல்லை. தோன்றினால் சில நேரம் மாலையில் போடுவேன். கோலம் போட்டு பழக்கம் இருந்தாலும் என்னுடைய கோலங்கள் என்றும் முழுமையான திருத்தத்துடன் இருந்ந்தது இல்லை. நோட்டில் போடுவது போன்று அழகாக வந்தது இல்லை. அதுவும் நான் கோலம் போட தயங்க காரணம்.  

சென்னையில் பல வீடுகளில் கோலம் போடுவது "அவுட் சோர்ஸ்" செய்யபடுகிறது. எனக்கு இது ஒன்றும் புதிது அல்ல. ஏனெனில்  எங்கள் வீட்டிலேயே பாத்திரம் விளக்கும் அம்மாவிடம் அந்த வேலை பின்னர் கொடுக்கப்பட்டது. நான் சந்தோஷம் அடைந்த நேரம் அது . பலர் பார்க்க ஏழு மணிக்கு கோலம் போட தேவை இல்லை. இருந்தும் மார்கழி மாதம் முழுவதும் கோலம் போடுவது எங்களுடையது. 

இந்த பதிவு  மிக நீளமாக போவதால் மார்கழி கோலம் பற்றிய பதிவை அடுத்ததாக, வாசல் கோலம் - பகுதி இரண்டு - ஆக  போடுகிறேன்.

-- தானேஷ் அம்மா

No comments:

Post a Comment